ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்...


காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீநளநாராயணப்பெருமாள் ஆலய மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 19ம் தேதி முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் ஆலயத்தின் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை பெருமாளுக்கும்,தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து பெருமாள் தாயாருடன் பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தின் அருகே வந்ததும் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை வரும் 18-ம் தேதியும் ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப்பெருமாள் திருக்கல்யாணம் வரும் 19-ம் தேதியும்  நடைபெற உள்ளது.கொடியேற்ற நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment