பித்ருதோஷம் தீர்க்க உகந்த மகாபரணி...


ஆவணி பௌர்ணமிக்குப் பிறகு வரும் அமாவாசை வரையிலான தேய்பிறை 15 நாள்களும் 'மஹாளய பட்சம்' என்று போற்றப்படுகிறது. இந்தப் புண்ணிய காலத்தில், நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து புறப்பட்டு இந்த பூமிக்கு வருவார்கள் என்பது ஐதீகம். நம்மோடு நம் முன்னோர்கள் உறையும் இந்த காலகட்டத்தில், பித்ருக்களை வழிபடுவது மிகவும் விசேஷம்.

பித்ரு வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தர்ப்பணம் செய்வது. பெரிய அளவில் தானம் செய்து புண்ணியம் ஈட்டமுடியாதவர்கள்கூட, மிக எளிமையாகத் தர்ப்பணம் செய்வதன்மூலம் பெரும் பயனை அடைய முடியும். தந்தை இல்லாதவர்கள், இந்த 15 நாள்களும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள், சில குறிப்பிட்ட தினங்களிலாவது தவறாது தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அத்தகைய புண்ணிய காலமாகத் திகழ்வது, மகாபரணி. தந்தை அல்லது தாய் இறந்த திதி அறியாதவர்கள்கூட, இந்த நாளில் அவர்களுக்கான நீர்க் கடன்களைச் செய்யலாம். அவ்வாறு செய்வதன்மூலம் உரிய புண்ணிய பலன்கள், அந்த ஆத்மாவை அடையும் என்பது நம்பிக்கை. மேலும், 15 நாள்களும் கர்மாவினைச் செய்ய முடியாதவர்கள், நாளை செய்வது அவசியம்.

தர்ப்பணம் செய்வதோடு, தானமும் செய்வது புண்ணிய பலன்களை அதிகப்படுத்தும். வறியவர்களுக்கு அன்னமிடுவது, வஸ்திர தானம் செய்வது, அதுவும் இயலாதவர்கள் வாழைக்காய், அரிசி ஆகியன தானம் செய்வது என ஏதாவது ஒன்றைச் செய்வது விசேஷம்.



Leave a Comment