அளவிடற்கரிய பலன் தரும் ஆருத்ரா தரிசனம்....


மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

“கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.
 



Leave a Comment