சபரிமலையில் ஆடி மாத பூஜைக்கு 5000 பக்தர்களுக்கு அனுமதி..... ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது


சபரிமலை  ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகமும், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இணையதள முகவரி sabarimalaonline.org என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்கள் 17-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment