பிரதோஷ பூஜையின் போது நந்திக்கும், சிவனுக்கும் என்ன மாலை அணிவிக்க வேண்டும்.... 


பிரதோஷம் அன்று ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

பிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.

பிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.

பிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

சில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.



Leave a Comment