தொழில், வியாபாரங்களில் ஏற்றத்தை கொடுக்கும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்! 


சனீஸ்வரருக்கென இருக்கும் தனி ஆலயங்கள், முக்கியமான ஆலயங்கள் என்று சில மட்டுமே உள்ளன. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயத்தில் அப்படியொரு சக்தியை நமக்கெல்லாம் வழங்கி அருள்வதற்காக சந்நிதி கொண்டிருக்கிறார் சனீஸ்வரர்.

திருவாரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் அக்னீஸ்வரர்.  திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம்  சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான ஆலயம்.

இங்கே உள்ள சனி பகவான், பொங்கு சனீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.சனி பகவான், நீதிபதி. நீதிக்கு மட்டுமே தலைவணங்கி அருளக்கூடியவர். நீதியை மட்டுமே கொண்டு பக்தர்களுக்கு அருளக்கூடியவர்.

"நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான்’ எனும் வசனம், சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பொருந்தும். சோதனைகள் கொடுத்தாலும் சனி கிரகம் எப்போதுமே கைதூக்கி விடும், நன்மைகள் செய்யும். வாழ்வை உயர்த்தி வளம் தரும். ஏனென்றால், சனீஸ்வரர், நீதிபதியைப் போல் செயல்படக் கூடியவர்.

நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமானவராக வணங்கப்படுபவர் சனீஸ்வர பகவான். வேறு எந்தத் தெய்வத்துக்கும் ஈஸ்வரப் பட்டம் இல்லை. ஆனால் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டமும் இணைந்து அழைக்கப்படுகிறது.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி எனும் காலங்கள் உண்டு. இதைக் கொண்டு, சனீஸ்வரரை தக்கபடி வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எல்லா நலத்தையும் வளத்தையும் கொடுப்பார். அதற்காகவே, பொங்கு சனீஸ்வரராக இருந்து அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி, ஆயுள்காரனும் சனி பகவானே! எனவே, ஆயுள் பலமும் ஆரோக்கிய பலமும் தந்து அருள் வழங்குகிறார். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுகிறார்.

சனிக்கிழமைகளில், பொங்கு சனீஸ்வரரை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். எள் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள். தினமும் சனி பகவானை நினைத்து காகத்துக்கு உணவிடுங்கள். தோஷமெல் லாம் நிவர்த்தியாகும். குறிப்பாக, சனியால் உண்டான தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். சனி பலம் பெற்று, உத்தியோக, தொழில், வியாபார விஷயங்க ளில் உன்னத நிலையை அடைவீர்கள்.



Leave a Comment