நெல்லை மாவட்டம் - நவதிருப்பதிகளை ஒரே நாளில் தரிசிக்க வேண்டுமா?


நெல்லை மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும். தடையாக இருப்பது ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நவதிருப்பதிக்குமான சரியான போக்குவரத்து வசதி இல்லாததும், தனியே கார் வேன் போன்ற வாகனங்களில் செல்பவர்களுக்குக் கூட எந்த நேரத்தில் எந்த கோவில் வழி சென்றால் தடையில்லாமல் தரிசனம் முடித்து வரலாம் என்று தெரியாததும் தான்.
பொது வாகனமின்றி, தனி வாகனத்தில் செல்பவர்களுக்கான வழிமுறைகளை இங்கே பகிர்கிறோம். படித்து விட்டு எளிமையாக நவதிருப்பதிகளையும் தரிசித்து வருவீர்கள் என்பதற்கு உத்திரவாதம் கொடுக்கிறோம். முதலில், ஒன்பது கோவில்களின் நடை திறந்திருக்கும் நேரத்தினைப் பார்த்து விடலாம்.
ஸ்ரீவைகுண்டம் – காலை 7-12      மாலை 5 - 8
ஸ்ரீ வரகுணமங்கை – காலை 8 - 1     மாலை 1.30 - 6
திருப்புளியங்குடி – காலை 8 - 1     மாலை 1.30 - 6
இரட்டைத் திருப்பதி – காலை 8 - 1     மாலை 2. - 6
பெருங்குளம் – காலை 7.30 - 12     மாலை 5 – 8.30
தெந்திருப்பேரை – காலை 7.30 - 12     மாலை 5 – 8.30
திருக்கோளூர் – காலை 7.30 - 12     மாலை 5 - 8
ஆழ்வார்திருநகரி – காலை 6 - 12  மாலை 5 - 8.45
முதலில், அதிகாலையில் யாத்திரை தொடங்குபவர்களுக்கான வழியைப் பார்ப்போம்.
காலை ஆறு மணிக்கு ஆழ்வார்திருநகரியை அடைந்தால், 6.45 மணிக்குள் தரிசனம் முடித்து விட்டு, மதியம் வரை பசி தாங்குபவர்கள் டீ, காபி சாப்பிட்டுக் கொண்டும், பசி தாங்காதவர்கள் 7- 7.30க்குள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளவும். 7.30க்கு திருக்கோளூர், 8.15க்கு தென்திருப்பேரை, 9 மணிக்கு பெருங்குளம், 9.45க்கு இரட்டைத் திருப்பதி தரிசனம் என காலை 10.45 மணிக்கு முடிக்கலாம். 

அடுத்ததாக நேராக ஸ்ரீவைகுண்டம் சென்று விட வேண்டும். 11.45 – 12 மணிக்குள் தரிசனம் முடித்து விடலாம். அதன் பிறகு, திருவரகுணமங்கையும், திருப்புளியங்குடியையும் ஒரு மணிக்குள் நிறைவு செய்யலாம். 
 இந்த வரிசையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் கூட, மதியம்  1.30க்கு நடை திறப்பதால் திருவரகுணமங்கையும், திருப்புளியங்குடியும் அடுத்ததாக தரிசித்துக் கொள்ளலாம்.
ஒரு வேளை காலை 8-9 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து யாத்திரை தொடங்குபவர்கள், 2, ஆழ்வார்திருநகரி, 3, திருக்கோளூர், 4, தெந்திருப்பேரை, 5, பெருங்குளம், ஆகியவற்றை 12 மணிக்குள் முடித்துக் கொண்டு, பின் உங்கள் நேரத்திற்குத் தகுந்தாற் போல, இரட்டைத்திருப்பதி, திருப்புளியங்குடி, வரகுணமங்கை என்று நிறைவு செய்யலாம்.
மதியம் உணவுக்குப் பிறகு கிளம்புபவர்கள்: 
இரட்டைத்திருப்பதியில் தொடங்கி திருப்புளியங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருக்கோளூர், தெந்திருப்பேரை, பெருங்குளம் என்று நிறைவு செய்யலாம்.
மாலை 4 மணிக்குத் தொடங்குபவர்கள்: 
மதிய உணவிற்குப் பின் கிளம்புபவர்கள் போலவே பயணிக்கலாம்.  முடிந்தளவு, இருட்டிய பிறகு தாமிரபரணியின் வலப்புற திருப்பதிகள் அதாவது, இரட்டைத் திருப்பதி, திருப்புளியங்குடி, பெருங்குளம், தென்திருப்பேரை ஸ்தலங்களுக்குப் பயணிப்பதைத் தவிருங்கள். காரணம், குறுகிய பாதை, பொதுவிளக்குகள் அதிகமில்லா சாலைகள். வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடி உதவி கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளன.
முறையாகத் திட்டமிட்டால் நெல்லை மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளையும் ஒரே நாளில் தரிசிக்க முடியும்.



Leave a Comment