கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் தரும் ஸ்ரீ ருத்ர ஹோமம் 


ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்ப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. 

அதேபோல் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்ர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.

ஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 

63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார்  ஸ்ரீ  ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். “ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா  மாமலர்ச் சேவடி வழுத்தும்- என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.

ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூதசம்ஹிதையில், “விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித” என்று கூறுகின்றது.

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்ப்படும் பலன்கள் :

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவர்கள் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றனர். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் தடைபெற்ற காரியங்கள் நிவர்த்தி பெறவும், சுப நிகழ்ச்சிகள், உத்தியோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். 

ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூதசம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ர ஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.

பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.
 



Leave a Comment