ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு.... 


ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பத்தர்கள் குவிந்தனர்.கோவிந்தா..கோவிந்தா..கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறக்கப்பட்டது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில்  சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. கோதை பிறந்த  ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த  ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும்.  அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட ( எண்ணைக் காப்பு) உற்சவம்  வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு  கடந்த டிசம்பர் 26 ம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது.   இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப  நாளான இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா...  என்ற கோஷங்களோடு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள்,தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார்'   எழுந்தருளினர். 

வருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று திறக்கப்பட்ட  இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம்.எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபத்தில் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த படியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக ஸ்ரீ ஆண்டாள் கோயில் உள்ளதால் அங்கு சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தார்கள். 

சொர்கவாசல் திறந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இன்று முதல் இராப் பத்து எனும் உற்சவம்  தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.வரும் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை  முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் ( எண்ணெய் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது.    இந் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற பரமபத வாசல் திறப்பின் நிகழ்சசியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 250 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 



Leave a Comment