முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா......


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

சுவாமி வீதி உலாவின் போது மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும் அலர்மேல் மங்கை தாயே என்று கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாச சாகித்யா, அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பிலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மற்றும் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களின் வேடமணிந்து பங்கேற்றனர். 

இன்று இரவு சிம்ம வாகனத்திலும் நாளை காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.



Leave a Comment