மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 ஆம் தேதி நடை திறப்பு


நடப்பு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்து இருக்கிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். 

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
 

 நடை திறக்கப்படும் நாளான 16-ந் தேதி அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இருமேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.

6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். 
 



Leave a Comment