குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி


(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கன்னி ராசியினரே, "கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப நீங்கள் யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். புத்திகாரகனான புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள் நீங்கள். 


கிரகநிலை:
இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்தில் இருந்து உங்களது அஷ்டம - தொழில் ஸ்தானம் - அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தொழில் ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

உங்களுடைய சுகஸ்தானத்திற்கு மாற்றம் பெற்றிருக்கும் குருபகவானால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதிய நபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள். 


அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.  புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 

கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது. வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

உத்திரம் 2, 3, 4 பாதம்: 
இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். 

அஸ்தம்: 
இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “புருஷசூக்தம்” பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: “துளசியை” பெருமாளுக்கு படைத்துவர வாழ்வில் புத்தொளி பிறக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile : +91 7845119542



Leave a Comment