குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்


(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

"எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆவார். 

கிரகநிலை:
இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருந்து உங்களது அயன சயன போக - தன வாக்கு குடும்ப ஸ்தானம் - சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். 

உங்களுடைய ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு மறைந்திருந்தாலும் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.  ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்  கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம்  கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.  தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.  உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  

பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது. மாற்றுப் பயிர்கள் மூலம் பொருளாதாரம் மேலோங்கும். 

கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.  உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். 

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். 

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். 

ரோகிணி:
இந்த குரு பெயர்ச்சியால் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
இந்த குரு பெயர்ச்சியால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். 

பரிகாரம் : முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: “தாமரை மலரை” பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும். 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile : +91 7845119542



Leave a Comment