சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா  கோலாகலம்...!


மதுரை அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி ஆமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை விழா சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் கடந்த 27-ந் தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 1-ந் தேதி வரை கோவிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின் வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Leave a Comment