சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம்.... வீடியோ காட்சி....


சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது சிவ சிவ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். சைவர்களுக்கு கோயில் என்றாலே அது சிதம்பரத்தைக் குறிக்கும். இந்த பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மற்றும் ஆன் மாதங்களில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று  தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைத்து நகரத்தின் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேருக்கு முன்னால் பெண் பக்தர்கள் கோலமிட்டபடி நகரை அழகுபடுத்த, சிவ பக்தர்கள் சிவ கோஷம் முழங்க பல்வேறு இசைக் கருவிகளுடன் நடனமாடி நடராஜர் தேருக்கு முன்னால் சென்றனர். தேரோட்டம் முடிந்து இரவு தேர் நிலைக்கு வந்தது. பின்னர் தேரில் இருந்து நடராஜர் உள்ளிட்ட சுவாமிகள் இறக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து நாளை காலையில் மகாஅபிஷேகமும், பின்னர் திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 

நாளை மதியம் 2 மணி அளவில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சகிதம் நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
 



Leave a Comment