திருப்பதி செல்பவர்களின் கவனத்திற்கு.....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறையின் காரணமாக சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு  சந்திப்பு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 26 மணி நேரம் ஆனது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். 

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்த பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். ஆதார் அட்டை மூலமாக நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற சர்வ தரிசனம் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்று திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 6 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment