வறுத்த பயிறு முளைக்கும் அதிசயம் ....


பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..


ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.


அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.


திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

- ஏழுமலை வெங்கடேசன்

 



Leave a Comment