முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜித்த சூரியக்கதிர்கள்... பக்தர்கள் பரவசம்...


மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில் இறைவனை பூஜிக்கும் சூரியக்கதிர்கள்- பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு  முக்தீஸ்வரர் ஆலயத்தில் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மூன்று துவாரங்கள் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் ஊடுருவி முத்தீஸ்வர பெருமானை தழுவி செல்லும் இந்த அரிய நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் நடைபெறும்.

முதலாவதாக மார்ச் மாதத்தில் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தினமும் காலை 6:35 மணி முதல் 6:45 மணி வரை ஒரு முறையும் பிறகு 7:00 மணி முதல் 7 :10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 23ஆம் தேதி வரை சூரிய ஒளிபூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலை 6 :15 மணி முதல் 6:25 மணி வரை ஒரு முறையும். பிறகு 6:40 முதல் 6:50 மணி வரை என இரண்டாவது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம் ) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும் , மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது .

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும் , செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது . சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இந்த நாட்கள் விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு , அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால் , இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment