ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் மாயூரநாதர் யானைக்கு சிறப்பு பூஜை...


மயிலாடுதுறை ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாயூரநாதர் யானை அவயாம்பிகைக்கு சிறப்பு பூஜை செய்து யானை காலில் வெள்ளி கொலுசு அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் சாலை அருகே உள்ள ஸ்ரீ விஸ்வநாதபுரத்தில் ஸ்ரீ செல்வ கணபதி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாயூரநாதர் திருக்கோயில் அபயாம்பிகை யானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலுக்கு வந்த யானையை கைலாய வாத்திய மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பூத்தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து ஸ்ரீ செல்வகணபதி ஆலயம் முன்பு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து யானைக்கு இரண்டு முன்னங்கால்களில் பக்தர்களால் வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் யானை அபயாம்பிகையிடம் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னதாக ஸ்ரீ செல்வகணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.



Leave a Comment