காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்...


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு  நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் ஆவணி மாதம் நடைபெறக்கூடிய மூலத் திருவிழா விமர்சியான திருவிழாவாகும். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்றைய தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு அமைந்திருக்கும் சின்ன தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்ட கலசம் கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தர் மானூர் அம்பலம் நோக்கி புறப்படும் நிகழ்ச்சி வரும் 10ம் தேதியும் கரூர் சித்தருக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி பெரும் நிகழ்ச்சி வரும் 12ம் தேதியும் நடைபெறுகிறது.



Leave a Comment