அகத்தியர் வழிபட்ட கொழையூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்...


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கூழையூர் எனப்படும் கொழையூர் கிராமம் உள்ளது. உருவத்தில் குள்ளமான அகத்திய முனிவர் தனது பாவங்களை போக்கிக் கொள்ள வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் கூழையூர் என்றும் இத்தலத்து இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் பெயருடனும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தலம் மார்க்கண்டேயரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்கு  உரியதும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமும் ஆகும்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.



Leave a Comment