திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதும் ஆக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.

யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானம் நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார்  திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

 அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு  தெளித்தனர்.



Leave a Comment