நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் தினமும் வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் , அபிஷேக ஆராதனைகள், திருமூலமகாலிங்கம் ஸ்ரீ காந்திமதி அம்பாள் மூலவர் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 க்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், ஜனவரி 16 மாலை 6 மணிக்கு சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில் உள் சன்னதிகளில் வெளிப் பிரகாரங்கள், ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில் உள்சன்னதியில் வெளிப் பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்ர தீபங்கள் ஏற்றப்படும்.
அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறும் என்ற கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Comment