நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தினசரி அபிஷேக முன்பதிவு....


நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் 2017-ஆம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்படும்.


அதன் பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருள்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அபிஷேகத்திற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர். இதுவரை அபிஷேக செலவை 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது தினசரி அபிஷேகத்துக்கு ஒரு நபருக்கு தேவஸ்தான கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் பூஜை பொருள்கள் வாங்குவதற்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் வசூல் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் முந்தைய ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் முன்பதிவு தொடங்கும். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான முன்பதிவு வருகிற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒருநாள் அபிஷேகத்தில் 5 நபர்கள் பங்கேற்கலாம் எனவும், தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment