திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் தொடக்கம்


திருப்பதியில் வருடாந்திர வசந்தோற்சவம் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
வசந்தகாலம் முடிந்து கோடைகாலம் தொடங்கும் காலத்தில், கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்க, திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வசந்தோற்சவம் வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, பலவித பழரசங்களாலும், மூலிகை கலந்த வெந்நீராலும் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
வசந்தோற்சவம் நடைபெறும் 3 நாள்களும் திருமலையில் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.



Leave a Comment