மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தரிசனம்


பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அம்மாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதில் நேற்று அமாவாசையையொட்டி, மாசணியம்மன் கோயிலுக்கு கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கேரள பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் உள்புறம் மற்றும் வெளிபுறத்திலும் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள மாரியம்மன்கோயில், காளியம்மன்கோயில், காமாட்சியம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Leave a Comment