சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறப்பு


மண்டல பூஜை காலத்துக்காக, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 15)நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு, வரும் 16-ஆம் தேதி மண்டல காலம் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றுவார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ஆம் படி ஏறி கோயில் முன்புறத்துக்கு வருவர். மாலை, 6.30-க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து, கோயிலுக்கு அழைத்து செல்வார். இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
தொடர்ச்சியாக, 41 நாள்களும் அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்து, பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைப்பு நடைபெறும். டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.



Leave a Comment