சபரி மலை தரிசனத்திற்கு இலவச முன்பதிவு செய்ய....


மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். அப்போது பக்தர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் நெரிசல் மூலம் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இந்த சமயங்களில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வெகு தொலைவிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்ப்பதற்காக கேரள காவல் துறையின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தரிசனத்திற்கு இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் மட்டும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கூப்பனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். தரிசனத்திற்கு செல்லும்போது அந்த கூப்பனை பம்பையிலுள்ள போலீஸ் தகவல் மையத்தில் காண்பித்து டோக்கன் பெறவேண்டும். இந்த டோக்கனை காண்பித்து சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று எளிதில் தரிசனம் செய்யலாம்.



Leave a Comment