திருவண்ணாமலையில் நவராத்திரி விழா


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்புமிக்கது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 1ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான 1ம் தேதி இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அதைத்தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.

விழாவின் 2ம் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாளன்று கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாள் லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 10ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். அதே போல், பிரசித்தி பெற்ற துர்கையம்மன் கோயில், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.



Leave a Comment